திபெத் நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 126-ரைத் தாண்டியது; நூற்றுக்கணக்கானோர் காயம்
ஜனவரி-8 – சீனாவின் தன்னாட்சிப் பகுதிகளில் ஒன்றான திபெத்தை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை, 126-ரைத் தாண்டியுள்ளது.
நூற்றுக்கணக்கானோர் அதில் காயமடைந்துள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களும் வீடுகளும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
ஏராளமான பகுதிகளில் தண்ணீர் – மின்சார வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
திபெத்தின் புனித நகரான ஷிகாட்சேயில் நேற்று காலை ரிக்டர் அளவைக் கருவியில் 7.1-ராக அந்த சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
அதன் அதிர்வுகள் நேப்பாளம், பூட்டான், வட இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் உணரப்பட்டன.
ஷிகாட்சே, சீனாவின் முக்கிய நகரங்களிலிருந்து தொலை தூரத்தில் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
உறைபனிக்குக் கீழ் வெப்பநிலை உள்ள இப்பகுதியில், கடும் குளிர் நிலவுவதால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த ஷிகாட்சே நகரானது, திபெத்திய புத்த மதத்தின் முக்கிய நபரான பஞ்சன் லாமாவின் (Panchen Lama) பாரம்பரிய இடமாகும்.
இவர், திபெத்தியத் தலைவர் தலாய் லாமாவுக்கு அடுத்தபடியாக ஆன்மீக அதிகாரம் கொண்டவர்.