
சுபாங், அக்டோபர்-29, தீபாவளிக்கு நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த கனரக வாகனங்களுக்குத் தடையில்லை என பொதுப்பணி அமைச்சு தெரிவித்துள்ளது.
விழாக்காலங்களின் போது நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்த கனரக வாகனங்களுக்குத் தடை விதிப்பதானது அரசாங்க பதிவேட்டைப் பொருத்ததாகும்.
இதுவரையில் சீனப்புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களை மட்டுமே அவ்வுத்தரவு உட்படுத்தியுள்ளதாக பொதுப்பணி அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (Datuk Zahrul Hakim Abdullah) தெளிவுப்படுத்தினார்.
எனவே தீபாவளிக்கும் மற்ற பெருநாட்களின் போதும் கனரக வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கக் கட்டுப்பாடில்லை என்றார் அவர்.
இவ்வேளையில் கனரக வாகனங்களை உட்படுத்திய விபத்துகளின் போது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை, வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையான PLUS தயார் செய்து வைத்துள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நெரிசலை சீர் செய்ய முடியாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட கனரக வாகனங்கள் கட்டாய வெளியேற்ற (mandatory exit) முறையில் அப்புறப்படுத்தப்படுமென PLUS கூறியது.
அதற்காக நெடுஞ்சாலைகள் உட்பட நாடு முழுவதும் சுமார் 3,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.