
தைப்பிங், பிப்ரவரி 25 – பேராக் தைப்பிங்கிலுள்ள தாமான் ஜானா (Taman Jana) ரமலான் பசாரில் வாங்கிய பொரித்த கோழி இறைச்சிக்குள் புழுக்கள் இருந்ததை கண்ட பெண் ஒருவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் டிக்டாக்கில் பகிர்ந்த காணொளியில், பொரித்த கோழியின் உள்ளே புழுக்கள் அசைந்து கொண்டிருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. உணவை திறந்தபோது அவரது மகள் புழுக்களை கவனித்து பயந்து கத்தி அழைத்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, குழந்தை அந்த உணவை சாப்பிடவில்லை.
அன்று வீட்டில் சமைக்காமல், ரமலான் பசார் வியாபாரிகளை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கில் அங்கிருந்து உணவு வாங்கியதாக அவர் தெரிவித்தார். ஆனால் இத்தகைய அனுபவம் தமக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவும், வியாபாரிகள் நேர்மையுடனும் பொறுப்புடனும் உணவு தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
லாபம் ஈட்டும் நோக்கில் சுத்தம் மற்றும் உணவு தரத்தை புறக்கணிக்கக் கூடாது என்றும், மக்கள் தங்களின் பணத்தை செலுத்தி உணவு வாங்குவதால் தரமும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



