
கோலாலம்பூர், ஜூன்-22 – ‘நண்பா திட்டம்’ என்பது இந்திய இளைஞர்களுக்காக, தொடபுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் J-KOM அமைப்பால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.
Program Nadi Aspirasi Nasional Anak Muda என்பதே சுருக்கமாக ‘நண்பா’ என அழைக்கப்படுகிறது.
‘நண்பா’ எனும் தமிழ் வார்த்தையில் நட்பை மையப்படுத்தி அமைக்கப்பட்ட
இந்த திட்டம், இந்திய சமூகத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறது.
இந்தியச் சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையே உறவை வலுப்படுத்துவது
குறிப்பாக இளைஞர்களுக்கு அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள ஒரு தளத்தை உருவாக்குவது,
இந்தியச் சமூகத்தின் தேவைகளையும், அபிலாஷைகளையும் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது உள்ளிட்டவை இதன் நோக்கமாகும்.
தவிர, அரசாங்கம் வழங்கும் புதிய வாய்ப்புகள் குறித்து இந்திய இளைஞர்களிடயே விரிவாகப் பகிருதல், இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து இந்திய இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை ‘நண்பா’ திட்டத்தின் இலக்காகும்.
கடந்த மாதம் ஜோகூர் கூலாயில் இது தொடங்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்டமாக வரும் ஜூன் 28-ஆம் தேதியன்று கோலாலம்பூரில் இந்நிகழ்வு நடக்கிறது.
லெம்பா பந்தாய், IWK ECO பூங்காவில் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்நிகழ்வு நடக்கவுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் காலை 9 மணிக்கு நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
புதையல் வேட்டை, விளக்கக் கூட்டங்கள், அரசாங்க – தனியார் நிறுவன முகப்பு சேவை மற்றும் கண்காட்சி, வர்ணம் தீட்டும் போட்டி, ரஹ்மா மடானி விற்பனை, McDonald’s-சுடன் சிறார் மனமகிழ்வு நிகழ்வு, அதிர்ஷ்ட குலுக்கு போன்ற அங்கங்களும் உண்டு.
எனவே சுற்று வட்டார மக்கள் இதில் திரளாகப் பங்கெடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.