
புத்ராஜெயா, மே-3 – நியூ சிலாந்தில் குறிப்பாக வெலிங்டன், கேட்டன்பரி வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையால் மலேசியர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை.
வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா அதனை உறுதிப்படுத்தியது.
என்ற போதிலும் அங்குள்ள மலேசியர்கள் முழு விழிப்புடன் இருக்குமாறு அது கேட்டுக் கொண்டது.
வெலிங்டனில் உள்ள மலேசிய உயர் ஆணையம் வாயிலாக நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கு உதவித் தேவைப்படும் மலேசியர்கள் உயர் ஆணையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வெலிங்டனில் கனமழையுடன் வரலாறு காணாத அளவுக்கு மே 1-ஆம் தேதி புயல் காற்று வீசியது.
இதனால் பாதுகாப்புக் கருதி பள்ளிகளும் வணிகத் தளங்களும் மூடப்பட்ட வேளை, ஏராளமான விமானப் பயணங்களும் இரத்துச் செய்யப்பட்டன.
எனினும், நிலவரம் சற்று மேம்பட்டதால் உயர்மட்ட வானிலை எச்சரிக்கை நேற்று மீட்டுக் கொள்ளப்பட்டது.
வெலிங்டன் அனைத்துலக விமான நிலையமும் மீண்டும் திறக்கப்பட்டது; என்றாலும் சில விமானச் சேவைகள் இடையூறைச் சந்தித்துள்ளன.
Christchurch City, Selwyn போன்ற மாவட்டங்களில் வெள்ளம் இன்னும் வற்றாததாலும், சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாலும் அவசர நிலை இன்னமும் அமுலில் உள்ளது.