
குவாந்தான், டிசம்பர்-10 – பஹாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹாசானால் இப்ராஹிம் அலாம் ஷாவை (Tengku Hassanal Ibrahim Alam Shah) அடுத்தாண்டு திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பெண்ணொருவர் கூறிக் கொண்டுள்ளதை, பஹாங் அரண்மனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Faridah Daud எனும் அப்பெண், அடுத்தாண்டு ஏப்ரலில் தெங்கு ஹாசானாலைக் கரம் பிடிக்கவிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தியொன்றை பதிவேற்றி முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், அரண்மனை இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அப்பெண் இப்படி செய்வது இதுவொன்றும் முதல் முறையல்ல; ஏற்கனவே பல முறை இது போன்ற உண்மைக்குப் புறம்பானச் செய்திகளை அவர் பதிவேற்றி வந்துள்ளதாக, பஹாங் அரண்மனையின் முத்திரைக் காப்பாளர் மேஜர் ஜெனரல் டத்தோ மொஹமட் ச’ஹாரி யாஹ்யா (Mejar General Datuk Mohamed Zahari Yahaya) கூறினார்.
இது போன்ற அவதூறு செய்திகளையும் நல்லிணக்கத்தைக் குறிப்பாக பஹாங் அரண்மனையில் பிரச்னையை உண்டுபண்ணும் நோக்கிலும் செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் டத்தோ ச’ஹாரி எச்சரித்தார்.
பஹாங் அரண்மனை குறித்த தகவல்கள் அதன் அதிகாரப்பூர்வ இணையத் தளமான istanapahang.my -யில் மட்டுமே வெளியாகும்.
அது தவிர்த்து, Kesultanan Pahang என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி facebook, instagram, tik tok, you tube ஆகிய சமூக ஊடகப் பக்கங்களில் மட்டுமே அரண்மனை குறித்த செய்திகள் வெளியாகும்.
அதைத் தவிர்த்து வேறெங்கும் வெளியாகும் தகவல்களை பொது மக்கள் நம்ப வேண்டாமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.