
புத்ராஜெயா, மே-22 – 46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது வெளியிடப்படவுள்ள கோலாலம்பூர் பிரகடனம், நிர்வாகத் திறன், இலக்கவியல் உருமாற்றம் மற்றும் வியூகத் தயார் நிலைக்கான இவ்வட்டாரத்தின் எதிர்கால இலக்கை நிர்ணயம் செய்யும்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்துள்ளார்.
ஆசியான் வட்டாரத் தலைவர்கள், கல்விமான்கள், அரச தந்திரிகள் உள்ளிட்டோருக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பின் உச்சக்கட்டமே இந்த கோலாலம்பூர் பிரகடனம் என்றார் அவர்.
பழையவற்றைப் பேசி காலத்தை ஓட்டாமால், எதிர்காலத்திற்கான உருப்படியான திட்டங்கள் குறித்தும் அவற்றின் செயலாக்கம் குறித்தும் ஆசியான் கொண்டுள்ள கூட்டு கடப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
2025 ஆசியான் உச்ச நிலை மாநாடு குறித்து உள்ளூர் தகவல் ஊடகங்களின் தலைமை செய்தியாசிரியர்களுடன் நடத்திய சந்திப்பில் பிரதமர் அவ்வாறு சொன்னார்.
புத்ராஜெயா, ஸ்ரீ. பெர்டானாவில் நடைபெற்ற அந்நிகழ்வில் பெர்னாமா செய்தி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி Datin Paduka Nur-ul Afida Kamaludin, பெர்னாமா தலைமை செய்தியாசிரியர் Arul Rajoo Durai Raj பெர்னாமா பொருளாதாரப் பிரிவின் நிர்வாக செய்தியாசிரியர் Saraswathi Muniappan உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எது எப்படி இருப்பினும், வட்டார மேம்பாட்டுக்கு அமைதியும் பாதுகாப்பும் இரு முக்கியத் தூண்கள் என்றார் அவர்.
மலேசியா, இந்த 2025-ஆம் ஆண்டுக்கான ஆசியான் தலைமையாகும்.
இதையொட்டி வரும் மே 26, 27-ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் 46-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாடும், அதன் தொடர்பான பிற மாநாடுகளும் நடைபெறவிருக்கின்றன.