
நீலாய், ஜூன்-23 – நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் மதுபோதையிலிருந்த ஆடவர் கும்பலுக்குள் திடீரென மூண்ட சண்டையால், ஒருவர் பாராங் கத்தியால் வெட்டுக் குத்துக்கு ஆளானதோடு மரக்கட்டையால் சரமாரியாகத் தாக்கப்பட்டார்.
நேற்று காலை 6 மணிக்கு அங்குள்ள ஒரு துரித உணவகத்தின் முன் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
முகத்திலும் உடலிலும் இரத்தக் காயங்களுடன் 30 வயதிலான ஆடவர் செர்டாங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள அதிகாரி போலீஸுக்கு அழைத்துத் தகவல் கொடுத்தார்.
உடனடியாக விசாரணையில் இறங்கிய போலீஸ், அச்சண்டை குண்டர் கும்பல் அம்சங்களையோ தனிப்பட்ட பழிவாங்கலையோ அல்லது முன்பகையையோ உட்படுத்தவில்லை என்பதை கண்டறிந்தது.
மாறாக, சரியான குடிபோதையில் இருந்தபோது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாக, நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அப்துல் மாலிக் ஹசிம் தெரிவித்தார்.
சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில் வெட்டுக் குத்துக்கு ஆளான ஆடவரின் உடல் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.