
ஜோகூர் பாரு, ஜூன் 18 – கடந்த ஜூன் 15 ஆம் தேதி, ஜாலான் ஆஸ்டின் ஹைட்ஸ் 7/4 இல், பழுதடைந்த காவல்துறை ரோந்து வாகனத்தில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரிகளை, ஆடவன் ஒருவன் கடுமையாக திட்டும் வைரல் காணொளிக்கு மலேசிய காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
தாமான் செடியா இண்டா காவல் நிலையத்தின் குற்றத் தடுப்பு ரோந்து (RCJ) குழுவைச் சார்ந்த காவல்துறை அதிகாரிகள் பயணம் செய்த வாகனம், பழுதடைந்து சாலையின் நடுவே திடீரென நின்றதைத் தொடர்ந்து, பின்புற வாகனத்திலிருந்த அந்நபர் அதிகாரிகளைத் திட்டியது மட்டுமல்லாமல் அவர்களின் ஆத்திரத்தை தூண்டி காணொளியை வலைத்தளத்தில் பதிவேற்றியும் உள்ளார்.
இது பொதுமக்களிடையே, பணியில் இருக்கும் அதிகாரிகள் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கக்கூடும் என்று ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ரவூப் செலாமாட் கூறியுள்ளார்.
உண்மையில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பராமரிப்புப் பிரிவின் உதவிக்காகக் காத்திருந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை எவ்வித புகார்களையும் பெறவில்லையென்றும் பணியில் இருக்கும் அதிகாரிகள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை பரப்பக்கூடிய காணொளிகள் பரவுவதைக் காவல்துறை கண்டிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.