
கோலாலம்பூர், ஜூன் 26 – கடந்தாண்டு எஸ்.பி.எம் (SPM) தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, இனம், பின்னணி போன்ற கூறுகளின் அடிப்படையில் அல்லாமல், எவ்வித பாரபட்சமுமின்றி மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு, பத்து நாடாளுமன்ற உறுப்பினர்
பி. பிரபாகரன் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இது ஒரு துணிச்சலான முடிவு மட்டுமல்ல, நீதி, தகுதி மற்றும் மலேசிய இளைஞர்களின் எதிர்காலத்தை நிலைநிறுத்தும் நோக்கில் செயல்பட்ட மடானி அரசாங்கத்தின் பிரதிபலிப்பு என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்தக் கொள்கையை செயல்படுத்துவது வெளிப்படையாகவும், நியாயமாகவும், மலேசியா மடானியின் உணர்வின் அடிப்படையில் செயல்படுத்த முடியுமென்று தான் நம்புவதாகவும் பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் நல்ல திறன் வாய்ந்த மலேசியர்களை உருவாக்க இது வித்திடும் என்றார் அவர்.
அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நியாயமான மற்றும் தொலைநோக்கு கொள்கைகளுடன் நாட்டை வழிநடத்தும் பிரதமருக்கு அவர் மீண்டும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து கொண்டுள்ளார்.