
பிறை, மே-13 – பினாங்கு, பிறை, ஸ்ரீ செல்வ விநாயகர் இந்து பரிபாலன தேவஸ்தானத்தில், சித்திரா பௌர்ணமி கொண்டாட்டம் இறையுணர்வோடும் சமூக உணர்வோடும் விமரிசையாக நடைபெற்றது.
ஆலய மேலாண்மையை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அக்கோயிலின் நிர்வாகத்திடமே ஒப்படைத்தப் பிறகு நடக்கும் முதல் பெருவிழா இதுவாகும்.
இவ்விழாவில் அறப்பணி வாரியத்தைப் பிரதிநிதித்து செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் கலந்துக் கொண்டார்.
ஆலய நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் வகையில், மேலாண்மையை மீண்டும் ஆலயத்திடமே ஒப்படைத்ததற்கு அறப்பணி வாரியத்துக்கு ஆலய நிர்வாகத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
பிறை நகரில் மிகவும் பழமையானதும், மிகவும் போற்றத்தக்கதுமான இந்தக் கோயில், ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டது.
இங்கு சித்ரா பௌர்ணமி திருவிழா தெய்வீக சடங்குகள், துடிப்பான இசை மற்றும் சமூக நல்லிணக்கத்தால் நிறைந்திருந்தது குறித்து Dr லிங்கேஷ் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக, இது ஆன்மீக வளர்ச்சி, சமூக பிணைப்பு மற்றும் சமய நிகழ்வுகளுக்கான புனித இடமாக செயல்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக அறப்பணி வாரியத்தின் பராமரிப்பின் கீழ் இருந்த பிறகு, கோயிலின் நிர்வாகம் அண்மையில் உள்ளூர் பொறுப்பாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது, சுயாட்சி மற்றும் புதுப்பித்தலின் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.