
கோலாலம்பூர், ஜூலை 30 – சூதாட்டக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 635,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் இரு போலீஸ்காரர்கள் இன்று முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (MACC ) ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை ஏழு நாள் தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் முகமட் இஷாம் முகமட் அலியாஷ் ( Mohammad Izham Mohd Aliyas ) உத்தரவிட்டார்.
40 வயதுடைய அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 2 மணியளவில் ஜோகூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக MACC க்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சூதாட்டக் குற்றத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக தனிநபரிடமிருந்து லஞ்சம் கேட்டு பணம் பெற சதி செய்தனர் என அவர்கள் சந்தேகிக்கப்படுவதாக தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அவ்விருவரும் ரொக்கமாக 635,000 ரிங்கிட்டை பெற்றதாக நம்பப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதை ஜோகூர் MACC யின் நடவடிக்கைக்கான துணை இயக்குநர் ஹைருல் இல்ஹாம் உறுதிப்படுத்தினார்.