
கோலாலம்பூர், மார்ச் 16-மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பேராக் சுல்தான், சுல்தான் நஸ்ரின் அவர்களை, இன்று காலை தலைநகரிலுள்ள
இஸ்தானா பேராக்கில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடும் நல்வாய்ப்பினைப் பெற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, பேராக் மாநிலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பெர்கேசோ (PERKESO) மறுவாழ்வு மையத்தின் தற்போதைய கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் நிலை குறித்த விளக்கவுரையை சுல்தான் அவர்களின் மேலான பார்வைக்கு அவர் சமர்ப்பித்தார்.
அத்துடன், இந்த மறுவாழ்வு மையத்திற்குப் பொருத்தமான பெயர் சூட்டுவது குறித்தும், இம்மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைப்பதற்காக, சுல்தானுக்கு அழைப்பு விடுத்த்தார்.
மக்களுக்குப் பயனளிக்கும் இத்தகைய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மீது சுல்தான் அவர்கள் காட்டிய ஆழ்ந்த அக்கறைக்கும், தமக்குச் சந்திப்பு வழங்கியமைக்கும்
ரமணன் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் நல்வாழ்வையும் நாட்டின் சுபிட்சத்தையும் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் ஒவ்வொரு திட்டமும் செம்மையாகச் செயல்படுத்தப்படுவதற்கு, சுல்தான் அவர்கள் வழங்கிய ஆலோசனைகளும் மேலான கருத்துகளும் மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்றும் அவர் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, பேராக் மாநில இஸ்லாமிய சமய – மலாய் கலாச்சார மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ முகமட் அனுவார் பின் சைனி, மனிதவள அமைச்சின் துணைச் செயலாளர் (கொள்கை மற்றும் சர்வதேசம்) டாக்டர் ஹாஜி முகமட் ஷாஹரின் பின் உமார், பெர்கேசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமல், பெர்கேசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் பின் அஜிஸ் முகமட், பெர்கேசோ மறுவாழ்வு மையத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஹபீஸ் பின் ஹுசைன் ஆகியோர் உடனிருந்தனர்.



