
கோலாலம்பூர், ஏப் 13 – விரைவுப் பேருந்து ஓட்டுநர், ஒரு பெண்ணைத் தன் மடியில் அமர வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்குவதாகக் கூறப்படும் காணொளி வைரலனது குறித்து சாலைப் போக்குவரத்துத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பேருந்துப் பயணியால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் அந்தக் காணொளிக் காட்சியில், பேருந்து நகர்ந்துகொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்ட பெண் ஓட்டுநரின் மடியில் அமர்ந்தபடி ஸ்டேரிங்கை இயக்குவதையும் காணமுடிந்தது.
பின்தொடரும் வாகனம் ஒன்றின் டேஷ்கேம் மூலம் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் மற்றொரு தனி வீடியோவில், அந்தப் பேருந்து போக்குவரத்து நெரிசலில் நகர்வது தெரிகிறது.
முகநூல் பதிவின் அடிப்படையில், இந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டபோது அந்த விரைவுப் பேருந்து, (TBS) முனையத்திலிருந்து ஜோகூரின் கூலாய் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
அந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து தனது துறையால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாலை போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவின் மூத்த இயக்குநர் டத்தோ முகமட் கிப்லி மா ஹசன் கூறினார்.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் பேருந்து நிறுவனம் அடையாளம் காணப்பட்டதோடு வாக்குமூலம் அளிப்பதற்காக அந்த பேருந்து ஓட்டுநர் இன்று காலையில் அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விசாரணை முடிந்தவுடன் இந்த விவகாரம் மேல் நடவடிக்கைக்காக சாலை போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குநரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் .



