Latestமலேசியா

மித்ராவின் GDL லோரி ஓட்டுநர் லைசென்ஸ் உதவி திட்டத்தின் மூலம் சிலாங்கூரை சேர்ந்த 100 பேருக்கு வாய்ப்பு – பிரபாகரன்

கோலா குபு பாரு, ஜனவரி 23 – பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு அறிவித்த ஜி.டி.எல் லோரி ஓட்டுநர் லைசென்ஸ் உதவி திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 654 பேருக்கு லைசென்ஸ் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்திற்கு 2,600 பேர் விண்ணப்பித்த நிலையில் இன்று, முதல் கட்டமாக 100 பேருக்கு உதவி வழங்கப்பட்டது என்று மித்ரா சிறப்பு பணிக்குழுவின் தலைவர் பிரபாகரன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

விண்ணப்பத்தாரர்களின் விபரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, அந்த 100 பேர் தேர்வு செய்யப்பட்டதாக, அவர் கூறினார்.

இத்திட்டத்தில் விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள எஞ்சிய 550 பேருக்கு, குறிப்பிட்ட அவர்களின் மாநிலங்களின் அடிப்படையில் கட்டம் கட்டமாக இந்த உதவி வழங்கப்படும் எனவும் பிரபாகரன் கூறியுள்ளார்.

இதனிடையே, இன்றைய நிகழ்ச்சியில், சிலாங்கூரில் அமைந்துள்ள பி.எஸ். சாமி அகாடமி வாகனம் ஓட்டும் பயிற்சி மையத்தின் ஒத்துழைப்புடன், முதல் கட்டமாக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம், 3 வகையான ஜி.டி.எல் லைசென்ஸ் பயிற்சிகள் வழங்கப்படும் என பி.எஸ். சாமி அகாடமியின் இயக்குனர் கணேஷ் கூறினார்.

மித்ராவின் இத்தகைய திட்டங்கள், மேலும் பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கொள்ள உதவும் என பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!