
கோலாலம்பூர், பிப்ரவரி-2 – நாட்டில் முதலீட்டுத் திட்ட மோசடிகள் குறைவது போல் தெரியவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் முதலீடு என்ற பெயரில் சுமார் 19,000 பேர் மோசடிக்கு ஆளாகியுள்ளனர்.
பணத்தைக் பறிகொடுத்தவர்களில் 31-40 வயதுக்குட்பட்டவர்களே அதிகம்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் கணிசமாகவே உள்ளனர்.
அவர்கள் பறிகொடுத்த தொகை கொஞ்சநஞ்சமல்ல; 1.8 பில்லியன் ரிங்கிட் என புக்கிட் அமான் போலீஸ் கூறியுள்ளது.
கடந்தாண்டு மட்டுமே 6,337 முதலீட்டு மோசடிகளில் 847 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் வரும் முதலீட்டு விளம்பரங்கள் குறித்து அதிக கவனமாக இருக்கும்படி பலமுறை எச்சரித்தும், பொது மக்கள் வலிய சென்று மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர்.
சிறிய முதலீட்டில் பெரிய இலாபம் பார்க்கலாம் என்ற ஆசை வார்த்தைகளில் மக்கள் எளிதில் மயங்கி விடுகின்றனர்.
எந்த முதலீட்டிலாவது குறுகிய காலத்தில் 300 விழுக்காடு இலாபம் பார்க்க முடிவது சாத்தியமா என்பதை அவர்கள் யோசிப்பதில்லை.
கடைசியில் பறிபோவது அவர்கள் ஆண்டுக்கணக்கில் வேர்வை சிந்தி உழைத்தப் பணமும் சேமிப்பும் தான்.
இந்நிலையில் 2021-ரிலிருந்து இதுவரை 11,493 சந்தேக நபர்கள் கைதாகி பெரும்பாலோர் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுளௌளனர்.
ஆக ஒன்றை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; சமூக ஊடகங்களிலோ அல்லது இணையச் செயலிகளிலோ முதலீட்டுத் திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டால் அவை கண்டிப்பாக மோசடிகள் தான் என்று…
புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ ரம்லி மொஹமட் யூசோஃப் The Star-ருடனான நேர்காணலில் இவ்விவரங்களைத் தெரிவித்தார்.