
கோலாலம்பூர், ஜூன்-24- வேப் அல்லது மின்னியல் சிகரெட்டுகளில்
கொக்கேய்ன் போதைப்பொருள் திரவத்தை நிரப்பும் அனைத்துலக போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 19-ஆம் தேதி அம்பாங் ஜெயாவில் ஒரு ஹோட்டலுக்கு அருகே 4 சந்தேக நபர்களை போலீஸார் கைதுச் செய்த போது, அக்கும்பலின் குட்டு அம்பலமானது.
அந்நால்வரில் ஒருவர் உள்ளூர் ஆடவர், ஏனையோர் சிங்கப்பூரியர்கள் ஆவர்.
அவர்களின் Toyota Vellfire காரின் பின்னிருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5,000 வேப் பேனாக்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் மொத்ததாக 9, 420 மில்லி லிட்டர் கொக்கேய்ன் திரவங்கள் நிரப்பப்பட்டிருந்தன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 7.2 மில்லியன் ரிங்கிட் ஆகும்.
Airbnb மூலம் ஒரு நாளைக்கு 300 ரிங்கிட் வாடகையில் ஆடம்பர அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுத்து அக்கும்பல் அந்த வேலையைப் பார்த்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக, புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கூறியது.
போதைப்பொருள் நிரப்பப்பட்ட வேப்கள் பின்னர் வெளிநாடுகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் தலா 1,500 ரிங்கிட் வரையிலும் அவை விற்கப்படுவதும் கண்டறியப்பட்டது.
கொக்கேய்ன் போதைப்பொருள் திரவத்தைக் கொண்ட வேப்கள் பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்; இதற்கு முன் வழக்கமாக ஷாபு போதைப்பொருள் திரவம் அடங்கிய வேப்களே கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் கூறியது.
சந்தேக நபர்கள் ஜூன் 26 வரை விசாரணைகளுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்