
சீனா, மே 23 – கடந்த மே 17-ஆம் தேதியன்று, சீனா சிச்சுவான் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, புற்று நோயால் அவதியுற்று மருத்துவமனையிலிருக்கும் தங்கள் வகுப்பு தோழனோடு பட்டமளிப்பு விழா புகைப்படங்களை எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் கலங்கடித்துள்ளது.
ஆனால் பள்ளி சீருடையில் ‘ஆக்சிஜென்’ கருவிகளுடன் படுக்கையில் இருந்தவாறு புகைப்படம் எடுத்துக் கொண்ட ரெனின் (Ren), அடுத்த நாளே உயிரிழந்தது, அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கடந்த ஆண்டிலிருந்து ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார் 16 வயது நிரம்பிய ரெனின். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், மே முதல் அவரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்திருக்கிறது.
இதனிடையே, அம்மாணவனைக் காண ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறை நண்பர்கள் என 60க்கும் மேற்பட்டோர் 2 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து வந்து, பூக்கள், பரிசு பொட்டலங்களை கொடுத்து ரெனினை உற்சாகப்படுத்தினர்.
மறுநாளே ரெனின் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
இந்நிலையில் அவரது தந்தை தனது மகனின் வகுப்பு தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் முயற்சிக்கு கண்ணீர் மல்க நன்றி கூறியிருக்கின்றார்.