கோலாலம்பூர், ஜன 8 – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
ஹன்னா இயோ ( Hannah Yeoh ) எழுதிய புத்தகம் நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாகவும் ஆபத்தாகவும் இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில் இதுவரை 59 தனிப்பட்ட நபர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து இதுவரை நாடு தழுவிய நிலையில் 182 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்திருக்கிறார். எனினும் ஹன்னா இயோவிடம் இன்னும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை என அவர் கூறினார்.
மலேசிய Darul Islah சமூகநல இயக்கம் மற்றும் மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கம் உட்பட பல்வேறு அரசு சார்பற்ற இயக்கங்கள் ஹன்னா இயோவுக்கு எதிராக போலீஸ் புகார்களை செய்துள்ளதாக இதற்கு முன் தகவல்கள் வெளியாகின. இந்த புத்தகம் தொடர்பில் நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் முன்னாள் போலீஸ்படைத் தலைவர்
டான்ஸ்ரீ மூசா ஹசான் வெளியிட்ட அறிக்கை குறித்து அவருக்கு எதிராக ஹன்னா இயோ தொடுத்திருந்த அவதூறு வழக்கு மனுவை கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.