
கோலாலம்பூர், மார்ச்-23 – பிறந்தது முதல் இருதய நோய்க்கு ஆளான 9 வயது சிறுமி ஹர்ஷீத்தா சாய் (Harsheeta Sai) செல்வ கணபதியின் வெளிநாட்டு அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் நிதியில், இதுவரை 20,000 ரிங்கிட் மட்டுமே தேவைப்படுகிறது.
அமெரிக்காவின் பாஸ்டன் (Boston) மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான மருத்துவச் செலவு 350,000 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், அதில் 98 விழுக்காடு நிதி திரட்டப்பட்டுவிட்டது.
இந்நிலையில் எஞ்சிய நிதியைத் திரட்டுவதற்கு நல்லுள்ளம் கொண்ட பொதுமக்கள் உதவுமாறு தந்தை செல்வ கணபதி வணக்கம் மலேசியாவிடம் கூறியுள்ளார்.
சுங்கை பூலோ, சரஸ்வதி தமிழ்ப் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவியான ஹர்ஷீத்தாவிற்கு, பிறந்தது முதல் ஆக்சிஜன் அளவு 70 விழுக்காடு முதல் 75 விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வருகிறது.
பிறந்த 30 நாட்களில் அச்சிறுமிக்கு இருதயக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதாக செல்வ கணபதி கூறினார்.
இந்நிலையில், அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்வதே ஒரே வழியென தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN பரிந்துரைத்துள்ளது.
ஆனால் அதற்கான செலவு அதிகமென்பதால் நல்லுள்ளங்களின் உதவியை அவர் நாடினார்.
இதனிடையே ஹர்ஷீத்தாவின் நிலையறிந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், உடனடியாக அச்சிறுமிக்கு உதவ பணித்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் அரசியல் செயலாளர் பர்ஹான் பவ்சி (Farhan Fauzi) சிறுமி ஹர்ஷீத்தா சாயின் இல்லத்திற்கு வருகை புரிந்து நலம் விசாரித்ததோடு பிரதமர் சார்பில் நிதியுதவிக்கான காசோலையை அவரது தந்தை செல்வ கணபதியிடம் வழங்கியிருந்தார்.
ஹர்ஷீத்தா வெளிநாட்டில் சிகிச்சைப் பெற்று பூரண குணமடைந்து மற்ற பிள்ளைகள் போல் ஓடியாடி விளையாட வேண்டும்.
நல்ல மனதோடு ஹர்சித்தாவின் மருத்துவ செலவிற்கு மேலும் உதவ விரும்புவோர் 7001233409 (CIMB) Selva Ganapathy A/L Ramdass என்ற வங்கிக் கணக்கில் தாராளமாக தொடர்ந்து உதவலாம்.