
புத்ராஜெயா, ஜூன்-6 – உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான அனைத்து வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களும் அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் முத்திரையிடப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.
அந்தத் தேதியிலிருந்து இறுதிச் செய்யப்படும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முத்திரை வரிக்கு உட்பட்டதாக இருக்கும் ; முத்திரையிடுவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும் LHDN எச்சரித்தது.
இந்த உத்தரவானது, 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட STSDS எனப்படும் முத்திரை வரி சுய மதிப்பீட்டு முறையை படிப்படியாக செயல்படுத்துவதற்கு ஏற்ப அமைவதாக, அவ்வாரியம் கூறியது.
கடந்த ஜனவரி முதல் நாடு தழுவிய அளவில் விரிவான முத்திரை வரி தணிக்கைகளை LHDN மேற்கொண்டு வருகிறது.
அதில், முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான பல வேலைவாய்ப்பு ஒப்பந்த ஆவணங்கள், 1949-ஆம் ஆண்டு முத்திரைச் சட்டத்தின் தேவைக்கேற்ப முத்திரையிடப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது; அந்த முத்திரை வரி 10 ரிங்கிட் மட்டுமே.
இந்நிலையில் முதலாளிகள் மீதான சுமையைக் குறைக்க, 2025 ஜனவரி 1-ஆம் தேதிக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களுக்கு முத்திரை வரியிலிருந்து விலக்களிக்க நிதி அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது.
2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை இறுதிச் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களும் முத்திரை வரிக்கு உட்பட்டவையே.
என்றாலும், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் முத்திரையிடப்பட்டிருந்தால், தாமதமாக முத்திரையிடும் அபராதங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
முத்திரைச் சட்டத்தை முழுமையாக பின்பற்றுவதை உறுதிச் செய்வதற்காக, ஏற்கனவே உள்ள மற்றும் வரவிருக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை மதிப்பாய்வு செய்து புதுப்பிக்குமாறும் அனைத்து முதலாளிகளையும் LHDN கேட்டுக் கொண்டது.