
ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 – பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி நியமிக்கப்படவுள்ளார்.
வழக்கை கையகப்படுத்தவும், புதிய விசாரணை தேதிகளை நிர்ணயிக்கவும் நீதிபதி நியமிக்கப்படுவார் என்று அன்வார் தரப்பு வழக்கறிஞர் அலிஃப் பெஞ்சமின் சுஹைமிபெஞ்சமின், நேற்று நடந்த வழக்கு நிர்வாகத்திற்குப் பின் அறிவித்தார்.
இந்த வழக்கை முதலில் விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜம்ஹிரா அலி, வழக்கறிஞர்களில் ஒருவருடன் குடும்பத் தொடர்பு இருப்பதால் பதவி விலகினார் என்றும் இரண்டாவது நீதிபதியாக ஜஹாரா நியமிக்கப்பட்டார் என்றும் அறியப்படுகின்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில், அன்வார் தன்னை இனவெறி கொண்டவர் என்றும், பதவியில் இருந்தபோது தனது குடும்பத்தை வளப்படுத்தியதாகவும் கூறியதாக குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அன்வார் அனைத்து அவதூறு அறிக்கைகளையும் திரும்பப் பெற்று, அவற்றை பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, எதிர்காலத்தில் இதே போன்ற அறிக்கைகளை மீண்டும் செய்யக்கூடாது என்றும் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.