
கோலாலம்பூர், ஜூன் 5 – ஸ்ரீ கெம்பாங்கானிலுள்ள அங்காடியொன்றில் தனது மனைவி வாங்கிய பொருட்களை ஆடவர் ஒருவர், தள்ளுவண்டியிலிருந்து வெளியே வீசும் காணொளி நேற்று முதல் டிக்டோக்கில் வைரலாகி வருகின்றது.
இச்சம்பத்திற்கு முன்பு, கணவன் மனைவி இருவரும் சண்டையிட்டு கொண்டதாகவும், தள்ளுவண்டியிலிருந்து கணவன் பொருட்களை வீசும்பொழுது, மனைவி தாம் பண்டிகை பலகாரங்கள் செய்வதற்காக அப்பொருட்களை வாங்கியதாகவும் அதனை வீச வேண்டாம் என்றும் கணவரிடம் கெஞ்சியுள்ளார்.
நிலைமையை மேலும் மோசமடைய விடாமல், அங்காடி ஊழியர் ஒருவர் அவ்விருவரையும் அமைதிபடுத்திய பிறகு, கணவன் தான் வீசிய பொருட்களை மீண்டும் வண்டியில் எடுத்து வைப்பதைக் காணொளியில் காண முடிகின்றது.
இந்நிலையில், காணொளியை பார்த்த வலைதளவாசிகள், உண்மையிலேயே இவர்கள் சண்டையிட்டு கொள்கின்றார்களா அல்லது காணொளிக்காக நடிக்கின்றார்களா என்ற குழப்பத்தில் உள்ளனர்.