
கோலாலம்பூர், பிப் 18 – இனப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டம் போன்ற புதிய சட்டத்தை இயற்றவோ அல்லது அறிமுகப்படுத்தவோ தேவையில்லை என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் ( Aaron Ago Dagang ) தெரிவித்தார்.
இனங்களுக்கிடையில் உறவுகள் பேணப்படுவதற்குப் போதுமானதாகக் கருதப்படும் தற்போதைய சட்டங்களின் அமலாக்கத்தை அதிகரிப்பதே போதுமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் சட்டம், 1948 ஆம் ஆண்டின் தேசத்துரோகச் சட்டம் , 1998 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் , 1984ஆம்ஆண்டின் பிரசுர இயந்திரம் மற்றும் வெளியீட்டு சட்டம் உட்பட 10 சட்ட விதிகள் போதுமானதாகக் கருதப்படுகின்றன என்று அவர் கூறினார்.
வேண்டுமென்றே எந்தவொரு செயலையும், தூண்டுவது அல்லது இன மற்றும் சமய ஒற்றுமையைக் சீர்குலைக்கும் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடும் எவரும் அது தொடர்பான சம்பந்தப்பட்ட சட்டத்தின்படி விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரமுடியும்.
நல்லிணக்கம் பேணப்படுவதை உறுதி செய்வதற்கு இன, மதம் மற்றும் சமூக பின்னணியை பொருட்படுத்தாமல் வெளிப்படையான மற்றும் நியாயமான அமலாக்கம் மிகவும் முக்கியமானது என இன்று நாடாளுமன்றத்தில் லிம் குவான் எங் (Lim Guan Eng) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Aaron Ago Dagang இத்தகவலை வெளியிட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இனத்துவேசம் கொண்ட தனிநபர்களிடையே அதிகரித்து வரும் நடவடிக்கைகளை தடுக்க இனப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படுமா என்று லிம் கேள்வி எழுப்பியிருந்தார்.