
வாஷிங்டன், ஜூலை-17- அமெரிக்காவில் தனது பானங்களில் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த Coca-Cola ஒப்புக் கொண்டுள்ளதாக, அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
Coca-Cola நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகளின் பலனாக இது சாத்தியமானதாக அவர் சொன்னார்.
இதற்காக, Coca-Cola நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாக, தனது Truth Social சமூக ஊகப் பதிவில் அவர் கூறினார்.
இந்நிலையில், கரும்பு சர்க்கரை கலக்கப்பட்ட Coca-Cola-வின் புதிய தயாரிப்புகள் குறித்து விரைவில் அறிவிப்போம் என அந்நிறுவனம் கூறியது.
அமெரிக்கச் சந்தைக்காக தயாரிக்கப்படும் Coca-Cola பானங்கள், பொதுவாக corn syrup எனப்படும் சோள சர்க்கரை நீரால் சுவையூட்டப்படுகின்றன.
ஆனால் பிற சில நாடுகளில் இதற்குப் பதிலாக கரும்புச் சர்க்கரை (cane sugar) பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகத்தின் MAHA எனப்படும் ‘Make America Healthy Again’ அதாவது ‘அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக்குவோம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக Coca-Cola நிறுவனத்துடன் இப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கர்கள் அதிக சர்க்கரை உணவுகளைப் பயன்படுத்துவதாக பரவலாகவே விமர்சனங்கள் உள்ளன.
குறிப்பாக சோள சர்க்கரையின் அதிக பயன்பாடு, சிறார்கள் மத்தியில் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கரும்புச் சர்க்கரைக்கும் சோள சர்க்கரைக்கும் இடையே உணவுசார் சத்துத் தன்மையில் பெரிதாக வித்தியாசமில்லை என மருந்துவ நிபுணர்கள் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.