
கெய்ரோ, அக்டோபர்-14,
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரை, அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் மீண்டும் முன்மொழிந்துள்ளது.
இம்முறை மிகவும் வெளிப்படையாக, அதுவும் உலகத் தலைவர்கள் இருக்கும் மேடையிலேயே பாகிஸ்தானியப் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அதனை அறிவித்தார்.
இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்தம் மீதான காசா அமைதி பிரகடனம் எகிப்தில் கையெழுத்தான நிகழ்வில், ஷெரிஃ அவ்வாறு செய்தது வைரலாகியுள்ளது.
“முதலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தவும், இப்போது மத்தியக் கிழக்கில் அமைதி ஏற்படவும் செய்த சிறந்த, அசாதாரண பங்களிப்புகளுக்காக, ட்ரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைக்கிறேன்” என அவர் சொன்னார்.
இஸ்ரேல், காசா, எகிப்து, கட்டா, துருக்கியே போன்ற நாடுகளை ஒரே மேடையில் கொண்டு வந்தது, ட்ரப்பின் அரசியல் சாணக்கியம் என்றும் மனிதநேய அணுகுமுறை என்றும் ஷெபாஸ் வானளாவ புகழ்ந்தார்.
அண்மைய காலமாகவே ட்ரம்புக்கு மிகவும் நெருக்கமாகக் காட்டிக் கொள்ளும் பாகிஸ்தானின் அடுத்த அதிரடியாக இது பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, இந்தியா – பாகிஸ்தான் போரில் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்யவில்லை என புது டெல்லி ஆணித்தரமாக கூறி வந்த போதிலும், மீண்டும் போகிற போக்கில் இந்தியாவை சீண்டும் விதமாக, ஷெபாஸ் பேசியிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.
ட்ரம்பை, ஷெபாஸ் நோபல் பரிசுக்கு முன்மொழிந்த போது, மேடையிலிருந்த இத்தாலியப் பிரதமர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட எவரிடமும் முகத்தில் எந்த பாவனையும் இல்லையென்பதோடு, ஒரு கைத்தட்டலும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது