
கோலாலாம்பூர், டிசம்பர்-9 – அரசாங்க உதவித் திட்டங்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் குறித்து செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக B40 குழுவைச் சேர்ந்த ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக, மேலவையில் 2026 பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்ற போது அவர் சொன்னார்.
மோசடி கும்பல்கள் விரைவான பண உதவி அல்லது சலுகை வழங்குவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களை புதிய வங்கி கணக்குகள் திறக்க வற்புறுத்துகின்றன.
பின்னர் ATM அட்டைகள் மற்றும் PIN எண்களைப் பெற்றுக்கொண்டு, அந்தக் கணக்குகளை சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு அவை பயன்படுத்துகின்றன.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டதும், கணக்குகள் முடக்கப்படுகின்றன; ஏழைகள் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்படுகின்றனர், ஆனால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவதாக சிவராஜ் அம்பலப்படுத்தினார்.
எனவே, அரசாங்கம் மக்கள் மத்தியில் நிதியறிவை மேம்படுத்தவும், அதிகாரப்பூர்வ உதவிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்யவும், மோசடி கும்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சிவராஜ் வலியுறுத்தினார்.
உதவித் திட்டங்கள் மக்களை உயர்த்த வேண்டும், குற்றத்திற்கு கருவியாக மாறிவிடக்கூடாது என்றார் அவர்.



