
கோலாலம்பூர், மார்ச்-25 – மலேசியர்கள் பங்கேற்கும் அரசாங்க நிகழ்வுகளில் மலாய் மொழியைக் காட்டிலும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் தரும் சில அரசு ஊழியர்களை, DBP எனப்படும் டேவான் பஹாசா டான் புஸ்தாகா சாடியுள்ளது.
நிகழ்ச்சிகள், இடம், பயிற்சித் திட்டங்கள் அல்லது பிரச்சார இயக்கங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.
அரசு அலுவல்களுக்கு தேசிய மொழியான மலாய் மொழிதான் பயன்படுத்தப்பட வேண்டுமென அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதனை இவர்கள் கண்டுகொள்வதில்லை என, DBP தலைமை இயக்குநர் ஹசாமி ஜஹாரி (Hazami Jahari) கூறினார்.
அரசு அலுவல்களில் மலாய் மொழியின் மாண்பை கட்டிக் காக்காதவர்கள், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள் என்றார் அவர்.
‘Back to School’, ‘KL Car-Free Morning’ போன்றவற்றை அவர் உதாரணமாகக் கூறினார்.
ஏதோ இரண்டு மூன்று பேர் வெளிநாட்டவர்கள் இருப்பதாலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்தைப் பயன்படுத்துகின்றனர்.
சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்றால் அங்கு முழுக்க முழுக்க அவர்களின் தேசிய மொழிதான் பயன்பாட்டில் உள்ளது; அதனை புரிந்துகொள்ள நாம் தான் மொழிப்பெயர்ப்பாளரைத் தேட வேண்டியிருக்கும்.
வளர்சியடைந்த நாடுகள் எல்லாம் ஆங்கில மோகத்தை விட, தத்தம் தேசிய மொழிகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.
நாமும் வளர வேண்டுமென்றால் நமது தேசிய மொழியை முதலில் மதிக்க வேண்டுமென ஹசாமி வலியுறுத்தினார்.