
கோலாலம்பூர், டிசம்பர்-12 – RM7 மில்லியன் பணமோசடி மற்றும் அதே தொகைக்கு வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட வழக்கிலிருந்து, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்தாண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவை அரசு தரப்பு கைவிட்டுள்ளதே அதற்குக் காரணம்.
வழக்கில் உள்ள 17 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தனது கட்சிக்காரர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை அரசு தரப்பு மீட்டுக் கொண்டதை, ரோஸ்மாவின் வழக்கறிஞர்களில் ஒருவரான Datuk Amer Hamzah Arshad உறுதிப்படுத்தினார்.
எனினும் அது வாபஸ் பெறப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து ரொஸ்மா மீதான அனைத்து பணமோசடி குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வந்துள்ளன.
_”தாம் குற்றமற்றவர் என்பதை ஆரம்பத்தில் இருந்தே ரொஸ்மா கூறி வருவதை நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது; இந்நிலையில், மேல்முறையீட்டிலிருந்து அரசு தரப்பு பின்வாங்கியதால் நாங்கள் நிம்மதியடைகிறோம்”_ என Amer கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் துணைவியாருமான ரொஸ்மா, சரவாக் பள்ளிகளுக்கான சூரிய சக்தி திட்ட ஊழல் தொடர்பில் இன்னொரு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் முறையீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



