
கோலாலம்பூர், மே 21 -2025 ஆம் ஆண்டு ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஆசியான்-ஜிசிசி) உச்சநிலை மாநாட்டிற்கான ஒத்திகையை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள பல சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. சம்பந்தப்பட்ட சாலைகளில் ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் கூச்சிங், ஜாலான் கினாபாலு, ஜாலான் டமன்சாரா மற்றும் ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம் ஆகியவையும் அடங்கும்.
இன்று காலை 9 மணியளவில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு ஆசியான் – வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சநிலைக் கூட்டத்தை முன்னிட்டு அரச மலேசிய போலீஸ் படை ஒத்திகையில் ஈடுபடும் என இதற்கு முன் கூறப்பட்டிருந்தது. நாளை ஆசியான் நாடுகளின் தலைவர்கள் வாகன அணி நடமாட்டம் சம்பந்தப்பட்ட ஒத்திகையும் இடம் பெறவிருக்கிறது. அதிகாரப்பூர்வ மாநாட்டு இடத்திற்குச் செல்லும் மற்றும் வரும் முக்கிய பாதையை உள்ளடக்கிய இந்தப் பயிற்சி நிகழ்நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.