
கோத்தா பாரு, மார்ச்-26- கிளந்தான், ஜாலான் குவா மூசாங் – குவாலா கிராய் சாலையில் நேற்று முந்தினம் ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Konsortium E-Mutiara நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியது.
சம்பவ வீடியோ வைரலான கையோடு, 40 வயது அவ்வாடவர் மீது அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, E-Mutiara குழுமத் தலைவர் Che Ibrahim Ismail கூறினார்.
அந்நிறுவனத்தில் ஓராண்டாக ஓட்டுநராக வேலை செய்து வரும் அந்நபர், சம்பவத்தின் போது பொறுமையில்லாமல் நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்து, மேல்முறையீடு செய்தார்.
என்ற போதிலும் விசாரணைக்காக அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக Ibrahim சொன்னார்.
விசாரணையின் முடிவில் அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவுச் செய்யப்படும்.
இது போன்ற சொல் பேச்சு கேட்காத ஓட்டுநர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில், அவரின் வாகனமோட்டும் உரிமத்தை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்துச் செய்யுமாறு, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ-வுக்கும் தாங்கள் பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறினார்.
சம்பவத்தன்று பேருந்து புறப்படும் முன், தினசரி விளக்கமளிப்புக் கூட்டத்தில் அவ்வாடவர் பங்கேற்றிருந்தார்; கவனமாக பேருந்தை ஓட்டிச் செல்லுமாறு அதன் போது அனைத்து ஓட்டுநர்களும் நினைவூட்டல் விடுக்கப்பட்டது.
இருந்தும், பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துக்கொண்டுள்ளது ஏமாற்றமளிப்பதாக Che Ismail தெரிவித்தார்.
E-Mutiara நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விரைவுப் பேருந்து, இரட்டை கோட்டில் மிகவும் ஆபத்தான முறையில் வரிசையாக வாகனங்களை முந்திச் செல்லும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.