
புத்ராஜெயா, மே-8, பொதுப் பணி அமைச்சு, உடனடி தடுப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் ஆபத்தான 20 மலைச்சரிவான இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
பொது மக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தலாம் என்பதால், அவை பழுதுபார்க்கப்பட வேண்டும்.
அதற்கு 36 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் செலவாகலாம் என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
கிழக்கு மேற்கு நெடுஞ்சாலை நெடுகிலும் உட்பட நாடு முழுவதும் உள்ள மலைச்சரிவுகள் அதிலடக்கம் என்றார் அவர்.
தற்போதைக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ள மலைச்சரிவுகளுக்கு முன்னுரிமைத் தரப்படுகின்றன; இவ்வாண்டு முடிவதற்குள் அவை பழுதுபார்ப்புக்கும் பராமரிப்புக்கும் விடப்படுமென அமைச்சர் சொன்னார்.
நாடு முழுவதும் மலைச்சரிவான இடங்களைப் பழுதுப் பார்க்க 2024 வரவு செலவு அறிக்கையில் 563 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியப் பிரதமருக்கும் அவர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
மக்களின் பாதுகாப்பு மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையை அது புலப்படுத்துவதாக, 2025 மலைச்சரிவான இடங்கள் மீதான மாநாட்டுக்குப் பிறகு அலெக்சாண்டர் நந்தா கூறினார்