
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சென்னை சாலை
சென்னை, பிப்ரவரி-19,
தனித்துவமான குரலால் திரைப்பாடல்கள் மட்டுமின்றி பக்திப் பாடல்களையும் பாடி புகழ்ப்பெற்றவரான பாடகர் Dr சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பெயரில் சென்னை மாநகராட்சி, சாலை ஒன்றை மாற்றி, அவருக்கு கௌரவம் செய்துள்ளது.
சென்னையில் அவர் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்ட சாலைக்கு ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ என்று பெயர் சூட்டப்ட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அப்புதியப் பெயர் பலகைத் திறந்து வைக்கப்பட்டது.
சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வர் சீர்காழி சிவ சிதம்பரம் உட்பட அவரின் குடும்பத்தார் நிகழ்வுக்கு வந்திருந்து, தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
“ஒரு சகாப்தத்தின் குரலாகத் திகழ்ந்த எங்கள் தந்தை சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நினைவாக இந்தச் சாலை அர்ப்பணிக்கப்பட்டது எங்களை நெகிழச் செய்கிறது. இது அவரது இசை பயணத்தையும், தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் போற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும். எங்கள் நீண்டகால கனவு நனவாகியுள்ளதால், இந்த கௌரவம் எங்களுக்கு என்றும் நினைவில் இருக்கும்” என சீர்காழி சிவசிதம்பரம் கூறினார்.
பத்ம ஸ்ரீ விருதுப் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான சீர்காழி கோவிந்தராஜன், 1988-ஆம் ஆண்டு தனது 55 வயதில் காலமானார்.
இதனிடையே, மெல்லிசை மன்னர் எம்.எஸ் விஸ்வநாதன், திருச்சி லோகநாதன் ஆகிய மேலுமிரு இசை ஜாம்பவான்களுக்கும் தமிழக அரசு அதே கௌரவத்தைக் கொடுத்துள்ளது.
விஸ்வநாதன் வசித்து வந்த சென்னை டிமாண்டி சாலைக்கு எம்.எஸ் விஸ்வநாதன் சாலை என்றும், மந்தைப்வெளிப்பாக்கம் நார்ட்டன் 3-ஆவது தெருவில் வசித்து வந்த சாலைக்கு திருச்சி லோகநாதன் சாலை என்றும் பெயரிட்டு ஸ்டாலின் பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.



