
புது டெல்லி, மே-29 – இந்தியாவுடனான மோதலை இந்து-முஸ்லீம் மோதல் என்ற பிம்பமாக சித்தரிக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை, AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாடுடின் ஒவைசி அம்பலப்படுத்தியுள்ளார்.
“நாங்கள் ஒரு முஸ்லீம் நாடு, இந்தியா அப்படி இல்லை” என்ற தவறான செய்தியை பாகிஸ்தான் அரபு உலகிற்கும் முஸ்லீம் உலகிற்கும் பரப்பி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
240 மில்லியனுக்கும் அதிகமான பெருமைமிக்க முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள் என்பதை பாகிஸ்தான் மறந்து விட்டது; அல்லது மறைக்க முயலுகிறது.
இந்தியாவில் பல புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள் உள்ளனர் என்றும் இந்த நேரத்தில் கூறிக் கொள்ள விரும்புவதாக ஒவைசி சொன்னார்.
“இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உலகில் உள்ள எந்த அறிஞரையும் விட மிகச் சிறந்தவர்கள். அவர்கள் அரபு மொழியில் சிறந்ததைப் பேச முடியும்..”
ஆனால், தாங்கள் ஓர் இஸ்லாமிய நாடு என்பதால் தான் இந்தியா தாக்குவதாக, உலக நாடுகள் மத்தியில் இஸ்லாமாபாத் விஷம பிரச்சாரம் செய்வதோடு, அனுதாபம் தேடப் பார்க்கிறது.
உண்மையில், பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தினாலே, தெற்காசியாவில் நிலைத்தன்மை ஏற்படும் என்று அவர் கூறினார்.
ஜம்மு – காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு இந்திய அரசாங்கத்தின் உலகளாவிய விளக்கமளிப்பு நடவடிக்கைக்காக இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்று ஒவைசி அவ்வாறு பேசினார்.