
ஷா ஆலாம், மார்ச்-16 – நாட்டில் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் அடிக்கடி இன உணர்வுகளை வைத்து விளையாடும் ஒரு சில தரப்புகளின் செயல், காலங்கடந்த யுக்தியாகும்.
வெறும் அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் துணிந்து செய்யும் செயல் அதுவென, சிலாங்கூர் ஷா ஆலாமில் DAP கட்சியின் 18-ஆவது பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விவாதிப்பதை விட, இன உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர்.
“அவர்களால் அரசாங்கத் தலைவர்கள் மீது ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோக புகார்களை முன்வைக்க முடியவில்லை; அதனால் தான் இன-மத விவகாரங்களை ஆயுதமாகக் கையிலெடுக்கின்றனர். அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்” என டத்தோ ஸ்ரீ அன்வார் நகைப்புடன் கூறினார்.
அரசாங்கம் DAP-க்கு அடிபணிந்து போவதாக கூப்பாடு போடுவதே சதா காலமும் அவர்களுக்கு வேலையாகப் போய்விட்டது.
ஆனால் அந்த தந்திரமெல்லாம் மடானி அரசாங்கத்திடம் இனியும் எடுபடாது என, அன்வார் திட்டவட்டமாகக் கூறினார்.
தேர்தலுடன் கூடிய இந்த DAP பொதுப் பேரவையில் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் (Anthony Loke), அமானா (AMANAH ) கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ மொஹமட் சாபு (Datuk Seri Mohamad Sabu) உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.