Latestமலேசியா

இரசாயனக் கசிவால் மூடப்பட்ட ஆயர் ஹீத்தாம் டோல் சாவடி மீண்டும் திறப்பு

பத்து பஹாட், ஜூன்-26 – நேற்று மாலை டிரேய்லரில் இருந்து ஆபத்தான மற்றும் அரிக்கும் இரசாயனங்கள் கொண்ட தோம்புகள் விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஜோகூர், ஆயர் ஹீத்தாம் டோல் சாவடி முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.44 மணி முதல் அனைத்து வாகனங்களும் அப்பாதைகளை பயன்படுத்தி வருவதாக, PLUS நிறுவனம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

மாலை 6.40 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தை அடுத்து, பாதுகாப்புப் காரணங்களால் தீயணைப்புத் துறை முன்னதாக அப்பாதைகளை மூடியது.

இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் ஆயர் ஹீத்தாம் டோல் சாவடி வழக்கம் போல் செயல்படுவது தெரிய வந்தது.

urea formaldehid வகை இரசாயனப் பொருட்களை ஏற்றியிருந்த 40 டன் எடையிலான கொள்கலன் லாரி, டோல் சாவடி அருகே வளையும் போது 3 தோம்புகள் சாலையில் விழுந்தன.

அதில் 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தோம்பு உடைந்து, இரசாயனம் சாலையில் கொட்டியது.

தீயணைப்புப் படை வருவதற்குள் முதல் தடுப்பு நடவடிக்கையாக, சாலையில் சிந்திய இரசாயனத்தின் மீது மண்ணைக் கொட்டி அதிகாரிகள் மூடினர்.

பின்னர் பாதுகாப்பான முறையில் இரசாயனம் அப்புறப்படுத்தப்பட்டு, சாலையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!