
கோலாலம்பூர், அக் 28 –
இரண்டு வாகனங்கள் மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் பெண் மீது மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி கைரி ஹரோன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அந்த குற்றச்சாட்டுக்களை 46 வயதான வுன் லீ போன் (Vun Lee Fon) மறுத்தார். இரண்டு குழந்தைகளின் தாயாரான Vun , முறையே 25 மற்றும் 61 வயதுடைய இரு பெண்களின் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும் ,இதனால் அவர்களுக்கு 70,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் மணி 12.52க்கு ஜோகூர் , முவாரில் உள்ள ஜாலான் ஹாஜி ஹசன் நிண்டுங்கில் ( Jalan Haji Hassan Nindung) கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக அப்பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 435 பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.



