Latestமலேசியா

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கத் திருப்பணி தொடங்கியது

கோலாலம்பூர், ஜூன் 5 -இறையருட் கவிஞர்’ செ. சீனி நைனா முகம்மது மறைந்து 11 வருடங்கள் கடந்துவிட்டாலும் அவரின் ஆழ்ந்த அகன்ற தொல்காப்பிய அறிவை வருங்காலத் தலைமுறையினர் உய்த்துணரும் நோக்கத்தில் ஈப்போ தமிழ்க் குறிஞ்சித் திட்டுக் கழகம் தனியொரு செயற்குழுவை அமைத்து அதன் தொலைநோக்குத் திட்டமாகப் பேரா ஜெலாபாங்கில் ‘செ.சீனி நைனா முகம்மது தொல்காப்பியத் திருக்கோட்டம்’ அமைக்கும் திருப்பணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதன் அறிமுக விழா பினாங்கில் அண்மையில் இளைய முஸ்லீம் விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இத்திருக்கோட்டம் ஈப்போ , ஜெலாப்பாங் நகரில் 502 சதுர மீட்டர் நிலப்பரப்பில் இரண்டு மாடிக் கட்டடமாக அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடத்தின் கீழ்ப்பகுதியில் தமிழ்வழி பாலர் வகுப்பு, கணினி அறை, நிர்வாக அறை ஆகியவற்றோடு மேல்மாடியில் பா.மு.அன்வார் நூலகமும், காப்பியன் நினைவகமும், கோ.சாரங்கபாணி சிறிய பொது மண்டபமும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இத்திட்டத்தின் தலைவரும் சொத்து நிர்வகிப்பாளருமான மேனாள் விரிவுரைஞருமான திரு.ப.தமிழ்மாறான் தெரிவித்தார். நல்ல தமிழ் இலக்கணம்’, புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்’, ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ , போன்ற நூல்களின் வழி தமிழ் இலக்கணத்தின் சுவையை எளிய இனிய முறையில் உணர்த்திய பெருமை அன்னாரையே சாரும்.

2019 ஆம் ஆண்டு முதலே ஜெலாபாங்கில் கடையொன்றின் மேற்புறத்தில் வாடகைக்கு செயல்படத் தொடங்கிய தொல்காப்பியத் திருக்கோட்டமானது தமக்கென நிரந்தரமான நினைவிடத்தை தமிழின் அடையாளமாக நிறுவும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதே இத்திட்டமென செயலாளரான திரு பிரபு கிருஷ்ணா கூறினார்.
இறையருட் கவிஞரின் வளர்ப்பு மகனான பிரபு கிருஷ்ணா ஐயாவின் படைப்புகள், கவிதைகள், ஆய்வுகள், அறிவு நூல்கள், பயன்படுத்திய பொருட்கள் என அனைத்தையும் இவர் தற்போதைய இடத்தில் அரும்பாடுபட்டு திரட்டி வைத்துள்ளார். புதிதாக அமைக்கப்பெறும் நினைவகத்தில் இவையனைத்தும் காட்சிக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மையத்தின் தலைவர் ஹஜி முனவர் சதீக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகர்களாக ஹஜி பஹாருதின் , பினாங்கு மாநில மஸ்ஜித் கப்பித்தான் கெலிங் தலைவர் டத்தோ ஹஜி பாரூக், ஈமான் பேரவைத் தலைவர் சாஹுல் ஹமிட், முஸ்தாக்கிம் இயக்கத்தின் தலைவர் அப்துல் ஹமிட் ,தியாகராஜன் மற்றும் டத்தின் சரஸ்வதி அவர்களும் கலந்து கொண்டனர். தொல்காப்பியத் திருக்கோட்ட உருவாக்கச் செயற்குழுவின் ஆலோசகராக டத்தோ ஸ்ரீ முகம்மது இக்பால் மற்றும் ஹஜி பஹாருதின் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!