
ஜோர்ஜ் டவுன், ஜன 23 – மோசமான வானிலை காரணமாக தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பினால் இவ்வாண்டு தைப்பூசத்தின்போது அதன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி 11 ஆம்தேதி நடைபெறும் தைப்பூச விழாவின்போது பக்தர்கள் கூடுதல் விலை கொடுத்து தேங்காய்களை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். செம்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து மழை பெய்துவருவதால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக பினாங்கை சேர்ந்த தேங்காய் விநியோகிப்பு கடையின் நிர்வாக இயக்குநர் எம். ஜோல் ஜெயச்சந்திரன் ( Joel Jeyachandran ) தெரிவித்தார். கடந்த ஆண்டு 1 ரிங்கிட் 90 சென்னுக்கு விற்கப்பட்ட தேங்காய் விலை இவ்வாண்டு
2 ரிங்கிட் 50 சென்னாக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு தைப்பூசத்தின்போது 70,000 தேங்காய்களை விநியோகித்ததாகவும் இவ்வாண்டு தைப்பூசத்திற்கு 30,000 தேங்காய்களை மட்டுமே ஒதுக்கியுள்ளோம். முதலில் வருவோருக்கு முதலில் விற்கப்படும் என்ற அடிப்படையில்தான் எங்களது விற்பனை இருக்கும் என அவர் கூறினார். ஆலயங்களில் தினசரி வழிபாட்டுக்கான அர்ச்சனைக்கு தேங்காய்களை விநியோப்பதில்கூட நாங்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளோம் என பாலச்சந்திரன் தெரிவித்தார். இதனிடையே நாடு முழுவதிலும் தேங்காய் விநியோகத்தில் பற்றாக்குறை இருக்கும் என பேரா சித்தியவானைச் சேர்ந்த தேங்காய் விநியோகிப்பாளர் A. அன்பரசனும் கூறியுள்ளார். முன்பெல்லாம் 15,000 தேங்காய்கள் தினசரி விநியோகத்திற்கு கிடைக்கும். இப்போது 4,000 முதல் 5,000 தேங்காய்கள் கூட கிடைக்கவில்லையென அவர் தெரிவித்தார்.