
ஈப்போ, பிப்ரவரி-23 – ஈப்போ, தாமான் ஹூவர், ஜாலான் ச்சுங் ஆ மிங்கில் உள்ள கடை வீட்டில் டியூஷன் ஆசிரியை ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
53 வயது அம்மாதுவின் சடலத்தை நேற்று மாலை 5 மணிக்கு அவரின் கணவர் கண்டெடுத்து போலீஸில் புகார் செய்தார்.
டியூஷன் மையமாகச் செயல்பட்டு வந்த இரண்டாவது மாடியின் தரையில், கழுத்திலும் கை முட்டியிலும் காயங்களுடன் அவர் இறந்துகிடந்தார்.
அருகில் மடக்கும் கத்தியும் கண்டெடுக்கப்பட்டதாக, ஈப்போ போலீஸ் துணைத் தலைவர் Mohamad Sajidan Abdul Sukor கூறினார்.
என்றாலும், சம்பவ இடத்தில் குற்ற அம்சங்களோ அல்லது யாருடனோ அவர் போராடியதற்கான தடயங்களோ காணப்படவில்லை.
கண்ணில் சீழ் வைத்ததால் ஏற்பட்ட வலியால் அம்மாது கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக, அவரின் கணவர் போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.
பிப்ரவரி 19-ஆம் தேதி தான் கண்ணிலிருந்து சீழை எடுக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டவர், கண் பார்வை குறைந்து வருவதாகவும் வலியைத் தாங்க முடியவில்லை எனவும் கணவரிடம் கூறியுள்ளார்.
கழுத்தறுத்ததே மரணத்திற்குக் காரணம் என தடயவியல் அறிக்கையும் உறுதிச் செய்திருப்பதால், அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.