
வாஷிங்டன், ஜூன்-22 – இஸ்ரேல் – ஈரான் மோதல் இரண்டாவது வாரத்தை எட்டிய நிலையில், ஒருவழியாக அமெரிக்கா அதில் நேரடியாக தலையிட்டு ஈரானைத் தாக்கியுள்ளது.
ஈரானில் Fordow, Natanz, Esfahan ஆகிய 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பியுள்ளது.
குறிப்பாக யுரேனியம் செறிவூட்டலின் முக்கிய நிலையமான Fordow அணு சக்தி மையத்தில் முழுமையாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பதுங்குக் குழியைத் தகர்க்கும் 13,000 கிலோ எடையுள்ள குண்டுகளைத் தாங்கிய அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானங்கள் அத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் அத்தாக்குதல் குறித்து இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் டோனல்ட் ட்ரம்ப், அதுவொரு வெற்றிகரமான தாக்குதல் என வருணித்தார்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படுமாறு பலமுறை வற்புறுத்தியும் ஈரான் பிடிவாதம் காட்டியதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் சொன்னார்.
ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சிகள், Fordow அணுசக்தி நிலையத்தின் ஒரு பகுதியை ‘எதிரிகள்’ தாக்கி அழித்திருப்பதாக செய்தி வெளியிட்டு வருகின்றன.
இஸ்ரேல் – ஈரான் மோதலில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது பெரும் ஆபத்தானது என்றும், இதனால் அந்த உலகக் ‘கட்டப்பஞ்சாயத்து’ நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முன்னதாக எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் – ஈரான் மோதலில் தற்போது அமெரிக்காவே நேரடியாகக் குதித்திருப்பதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்கும் என்பதற்கு இச்சம்பவமே சான்று என பார்வையாளர்கள் கூறுகின்றனர்