
கோம்பாக், அக்டோபர் -6,
இன்று அதிகாலை காராக் நெடுஞ்சாலையில் சிமெண்டு தூள் ஏற்றிச் சென்ற ஒரு லாரி விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில், ஓட்டுநர் உயிருடன் கருகி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு குழுவினர் உடனடியாக மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டனர் என்றும் சம்பந்தப்பட்ட லாரி சுமார் 60 சதவீதம் எரிந்த நிலையில் இருந்ததெனவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) செயற்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் அக்மட் முக்லிஸ் முக்தார் (Ahmad Mukhlis Mukhtar) தெரிவித்தார்.
இந்நிலையில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே கருகிய நிலையில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
மருத்துவ அதிகாரிகள் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர் என்றும் தீயணைப்பு நடவடிக்கை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



