
புத்ராஜெயா, ஏப்ரல்-13-எரிபொருள் நெருக்கடி காரணமாக, அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் (WFH) திட்டம் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கும் நிலையில், உள்துறை அமைச்சான KDN அதன் ஊழியர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் நேரத்தில், தங்கள் தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகள் இடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும் என KDN அறிவுறுத்தியுள்ளது.
வேலை நேரத்தில் டிக் டோக், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் நேரத்தைச் செலவிடுவது ஒழுக்கமற்ற செயலாகக் கருதப்படும்.
அவ்வாறு விதிமுறைகளை மீறும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என KDN தலைமைச் செயலாளர் டத்தோ Dr அவாங் அலி ஜெமான் (Awang Alik Jeman) நினைவுறுத்தினார்.
முன்னதாக, ‘வீட்டிலிருந்து வேலை’ என்பது ‘ஓய்வு எடுப்பதற்கான சலுகை அல்ல’ என அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் எச்சரித்திருந்தார்.
வீட்டிலிருந்தாலும், ஊழியர்கள் அலுவலகத்தில் இருப்பதைப் போலவே தங்கள் உற்பத்தித்திறனை நிலைநிறுத்த வேண்டும் என்றார் அவர்.
வீட்டில் பணி நேரத்தில் ஊழியர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க Geolocation புவியிட வசதியுடன் கூடிய சிறப்புச் செயலி பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஊழியர்கள் அதில் தங்களின் வருகையைப் பதிவுச் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



