
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களைப் பற்றிய பொய்ச் செய்திகளை கட்டுப்படுத்த, அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்த தவறான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக போலீஸும், MCMC எனப்படும் தொடர்பு – பல்லூடக ஆணையமும் கடுமையாக செயல்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை, சமூக ஊடகங்களில் பரவிய அத்தகைய 96 போலி தகவல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார் அவர்.
உலகளாவிய எரிசக்தி சவால்கள் மற்றும் பொருளாதார அழுத்தங்கள் நிலவும் இந்த நேரத்தில், இத்தகைய தவறான தகவல்கள் பொது மக்களை தவறாக வழிநடத்தி, நாட்டின் நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும் என பிரதமர் எச்சரித்தார்.
இச்செயல்கள் பொறுப்பற்றவை என்றும், குறுகிய அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டவை என்றும் அவர் சாடினார்.
சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிருவதற்கு முன் அவை உண்மையானவையா என்பதை மக்கள் சரிபார்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
அன்வாரின் உத்தரவைத் தொடர்ந்து, போலி செய்திகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் கண்காணிப்பையும், சட்ட அமுலாக்கத்தையும் மேலும் தீவிரப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.



