
புத்ராஜெயா, ஏப்ரல்-7- கையில் கிடைத்தவற்றை எல்லாம் அரசியலாக்கக் காத்திருப்போருக்கு மலேசியர்கள் இடமோ வாய்ப்போ வழங்கக் கூடாது என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
எழும் ஒவ்வொரு விவகாரமும் நல்ல முறையில் தீர்க்கப்பட்டு, முடித்து வைக்கப்பட வேண்டும்.
அதே சமயம் சமூக ஊடகங்களில் வைரலாக்கப்படும் விஷயங்கள் யாருடைய சுயநலத்திற்காகவும் அரசியல் இலாபத்திற்காகவும் பயன்படுத்தப்படக் கூடாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
சில நேரங்களில் சாதாரணமாக நல்ல முறையில் பேசித் தீர்க்க கூடிய விஷயங்களைக் கூட சமூக ஊடகங்களில் வைரலாக்கி ஊதி பெரிதாக்கி விடுகின்றனர்.
மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயத்தின் இடமாற்றம், DBKL அமுலாக்க அதிகாரிகளால் பலூன் வியாபாரி தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களைப் பிரதமர் உதாரணமாகக் காட்டினார்.
அவை சுமூகமாகத் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள்; ஆனால் என்னமோ போரே வந்து விடும் போன்றதொரு மாயை உருவாக்கப்பட்டு அவை ஊதி பெரிதாக்கப்பட்டு விட்டன.
எனவே தான் சுயநல புல்லுருவிகளுக்கு இடம் கொடுக்காதீர் என வலியுறுத்துவதாக, இன்று காலை நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்றுகூடலில் உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.