
ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-9-ஜோர்ஜ்டவுனில் உள்ள பினாங்கு பெரிய மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்தின் கட்டுமானப் பணி ஓர் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு சிமெண்டு கலவை இயந்திர ஓட்டுநர் கட்டுமானத் தளக் குழியில் விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து, கட்டுமானப் பணிகள் அனைத்தையும் உடனடியாக நிறுத்த பினாங்கு மாநகர மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான DOSH, சம்பவ இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை ஆராய்ந்து வருகிறது.
அதனடிப்படையில் பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தமது தரப்பு திருப்தியடையும் வரை எந்தப் பணியும் தொடர அனுமதியில்லை என, மாநகர மேயர் ராஜேந்திரன் அந்தோணி தெரிவித்தார்.
பினாங்கு பெரிய மருத்துவமனையின் விரிவாக்கத் திட்டம், 14-மாடி கோபுரத்தை உள்ளடக்கியதாகும்; இதில் 5 மாடிகள் வாகன நிறுத்துமிடங்களாகும்;
11 மாடிகளில் நிபுணத்துவ கிளினிக்குகளும், உச்சியில் உள்ள எஞ்சிய 3 மாடிகளில் நோயாளி வார்டுகளும் அமைக்கப்படவுள்ளன.
கடந்தாண்டு தொடங்கிய இத்திட்டம் 2029 மே மாதம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



