
கோலாலம்பூர், மே 15 – கனரக வாகனங்கள் சம்பந்தப்பட விபத்தில் குறிப்பாக பாதுகாப்பில் சாதாரணமாக இருக்க வேண்டாம் என சாலை பயணர்களுக்கு மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் Sharafuddin Idris Shah அறிவுறுத்தியுள்ளார்.
கற்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று போலீஸ் டிரக்கில் மோதியதில் FRU எனப்படும் கலகத் தடுப்பு பணியாளர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து கடுமையான ஓட்டுநர் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
லோரிகள் , பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களை நடத்திவரும் நிறுவனங்கள் தங்களது ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கடுமையான மதிப்பீட்டு செயல்முறைகளைச் செயல்படுத்த வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர்களும் அவர்களின் உதவியாளர்களும் இதற்கு முன் கடுமையான விபத்து போன்ற பின்னணியை கொண்டிருக்காமல் அவர்கள் பொறுப்பானவர்கள் என்பத உறுதி செய்ய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் சுல்தான் Sharafuddin பதிவிட்டுள்ளார்.
வாகனத்தின் நிலை மற்றும் ஓட்டுநர் தகுதிகள் போன்ற முக்கியமான பாதுகாப்புப் பிரச்னைகளை அனைத்து தரப்பினரும் புறக்கணிக்கக்கூடாது என்றும் சுல்தான் ஷராபுதின் நினைவூட்டினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் வாகன நிலை மற்றும் ஓட்டுநர் தகுதிகள் போன்ற அலட்சியத்திற்கு வழிவகுக்கும் விவகாரங்களை கண்மூடித்தனமாகவோ அல்லது சாதாரணமாகவோ எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார். நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பணியாற்றிவருவோரின் உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் இனியும் நடக்காமால் இருப்பதற்கு பிரார்த்திப்போம் என அவர் தெரிவித்தார்.