
கோலாலம்பூர், டிசம்பர் 1 – கோலாலம்பூர், கம்போங் பண்டானில் (Kampung Pandan) ஏற்பட்ட கலவரத்தில் 22 வயதுடைய மலாய் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், இரண்டு மியான்மார் நாட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு, இளைஞர் ஒருவர் சாலையில் இரத்தக்கசிவுடன் கிடந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவரது தலை மற்றும் இடது கையில் தீவிர காயங்களும் இருந்தன என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அடுத்த நாள் காலையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இந்த வழக்கு கொலை குற்ற அடிப்படையில் தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்றம் சந்தேகநபர்களை டிசம்பர் 2 வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்த தாக்குதல் குறித்த காணொளி பரவி வரும் நிலையில், அதில், பலரும் சேர்ந்து பாதிக்கப்பட்டவரை கல் மற்றும் ஆயுதங்களால் தாக்குவதையும் தெளிவாகக் காண முடிந்தது.



