
பஹாவ், மே-4- பெர்சாத்து கட்சியை கலைத்து விட்டு கூண்டோடு அம்னோவில் வந்திணையுமாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரையை, பெர்சாத்து தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
அப்பரிந்துரை உண்மையில் தலைக்கீழாக உள்ளது; பார்க்கப் போனால், அம்னோ தான் கலைக்கப்பட்டு, அதன் மொத்த உறுப்பினர்களும் பெர்சாத்துவில் இணைய வேண்டுமென, அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.
அம்னோவை விட பெர்சாத்துவுக்கே அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்; சட்டமன்ற உறுப்பினர்களும் எண்ணிக்கையும் அப்படியே;
ஆக, பெர்சாத்துவைக் கலைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அப்பரிந்துரையை முன் வைத்த அம்னோ மூத்த உறுப்பினர்களின் கிளப்புக்கு முஹிடின் பதிலடி கொடுத்தார்.
அம்னோவைப் போல், கொள்கையை அடகு வைத்து விட்டு DAP-யுடன் கூட்டணி வைக்கும் கட்சி நாங்கள் அல்ல என்றார் அவர்.
இவ்வேளையில், அடுத்தப் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை; கட்சியின் உயர்மட்டக் குழு கூடி பின்னர் அது குறித்து விவாதிக்கும் என அவர் சொன்னார்.
நெகிரி செம்பிலான், ஜெம்போலில் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதிக்கான பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பு அலுவலகத் திறப்பு விழா மற்றும் நோன்புப் பெருநாள் உபசரிப்பில் பங்கேற்ற போது, தான் ஸ்ரீ முஹிடின் அவ்வாறு சொன்னார்.
இவ்வேளையில், 3 மாடி அப்புதிய அலுவலகம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படுமென, அதன் ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவன் கூறினார்.
மூன்றாவது மாடியில் அனைத்து இன மாணவர்களுக்கு இலவச டியூஷன் வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன.
ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும், தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம்.
இது தவிர, வேலை வாய்ப்பு பற்றாக்குறை, மோசமான சாலை வசதிகள், போதிய கல்வி நிறுவனங்கள் இல்லாதது போன்றவை உள்ளூர் மக்களின் பிரச்னைகளாக உள்ளன.
எதிர்கட்சியாக இருந்துகொண்டே மக்களின் நாடித் துடிப்பை அறிந்து நாங்கள் செயல்பட்டு வருகிறோம்; இனி தேர்வு மக்களின் கையில் என, பெர்சாத்து கட்சியில் மலாய்க்காரர் அல்லாதோருக்கான பெர்செக்குத்துப் பிரிவின் துணைத் தலைவருமான சஞ்சீவன் கூறினார்.
அந்நிகழ்வில் பங்கேற்ற பொது மக்களில் சிலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும வகையிலும் இந்த சேவை மையம் செயல்பட்டு உதவும் என கலந்து கொண்ட உள்ளூர் மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.