
சுங்கை பூலோ, அக்டோபர்-5,
தீபாவளியை முன்னிட்டு, நாட்டில் பொருளாதார சவால்களைச் சந்திக்கும் இந்திய குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், AIM எனப்படும் அமானா இக்தியார் மலேசியா 16,600 ‘Bakul Kasih’ அன்பளிப்புக் கூடைகளை வழங்கியுள்ளது.
இந்நடவடிக்கை தீபாவளி வணக்கம் மடானி திட்டத்தின் கீழ், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ‘Bakul Kasih’ கூடைகளில் அரிசி, எண்ணெய், பருப்பு, முருக்கு மாவு போன்ற தீபாவளிக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.
இத்திட்டம், குறைந்த வருமானம் பெறுவோரின் சுமையை சிறிதளவேனும் குறைத்து, அவர்களும் தீபாவளியை குதூகலமாகக் கொண்டாட உதவும் என ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ஓர் அடையாள நிகழ்வாக சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில், 50 பேர் ரமணனிடமிருந்து கூடைகளை நேரடியாக பெற்றுக் கொண்டனர்.
அவர்களில் சிலர் தங்கள் மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வேளையில் மீதமுள்ள கூடைகளை ஏற்றிய 8 லாரிகள் நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டத்தோ ஸ்ரீ ரமணனின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
இம்முயற்சி, மடானி அரசாங்கம் மக்கள் நலனில் காட்டும் உண்மையான கடப்பாட்டை மீண்டும் நிரூபிக்கிறது.
1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமானா இக்தியார், இதுவரை சுமார் 4 மில்லியன் குடும்பங்களுக்கு பல்வேறு சமூக மற்றும் நிதி உதவித் திட்டங்கள் மூலம் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.